Tuesday, 30 April 2013

சட்டம் ஒரு இருட்டறை... - திரை விமர்சனம் ( Sattam Oru Iruttarai - Movie review )


சட்டத்தில் ஒரு ஓட்டையைப் போட்டு கொலை பாதகம் செய்தவர்களின் உயிர்களை அதே சட்டத்தில் இன்னொரு ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடும் கதை.
ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' பார்த்தவர்கள் அதனுடன் ஒப்பிடாமல் இந்தப்படத்தைப் பார்க்க முடியாது. ஒப்பிட்டே ஆக வேண்டும் என்பது போலவே '81 ல் வந்து ஐந்து மொழிகளில் வெற்றி பெற்ற படம் இது' என்பதை பட ஆரம்பத்திலிருந்தே நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, ஏற்கனவே கடையைப் போட்டு ஐந்து ஊர்க்காரர்களுக்கு ஆப்பம் சுட்டு பரண்மீது வைத்திருந்த சட்டியை இந்த ஜெனரேஷன் பேத்தியிடம் கொடுத்து கடை போட்டுத் தந்திருக்கிறார் எஸ்.ஏ.சி. பேத்தி சுட்ட ஆப்பத்துக்கு 'பாயா' தயாரிப்பும் அவரே. ( டைரக்ஷன் மேற்பார்வை )
தமிழ்ப்படத்தில் முன்னாள் கேப்டனின் அந்த 'டெரர்' கண்கள் பாதிக்கப்பட்ட ஒருவனின் பழிவாங்கும் எண்ணத்தைப் பிரதிபலித்தது. ஆனால் இதில் அதற்கான வாய்ப்பு ஹீரோ தரணிடம் மிஸ்ஸிங். அதேபோல்தான் தரணின் அஸிஸ்டன்ட் கமிஷனர் அக்காவாக வரும் ரீமா சென்னிடமும் 'போலீஸ் மிடுக்கு' மிஸ்ஸிங்.
தரணுக்கு சொல்லிக் கொள்ளத் தக்க வேடம். அவரும் அதற்குமேல் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிக் கொடுத்ததை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டாவது படத்திலேயே அவருக்கு இரண்டு ஜோடிகள் கிடைத்ததற்கு 'மதுரை வீர சாமி'க்கு அவர் மண்டியிட்டு பூஜிக்கலாம்.
'பிளாஷ்பேக்' நாயகி பியாவுக்கு, 'மோட்டிவேட்' நாயகி பிந்து மாதவியை விட கொஞ்சம் தூக்கலான கேரக்டர். அவரைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள் என்பதால் கொஞ்சம் மீட்டருக்கு மேல் போட்டுத் தந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
sattam
கடந்த காதல் தெரிந்தே பழகும் பிந்துமாதவிகள் போல காதலிகள் கிடைத்தால் எந்த மனிதனும் ஹீரோவாகலாம். கதையை பேலன்ஸ் செய்ய உதவுகிற பிந்துமாதவி அந்த வேலைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார்.
ஒரிஜினல் சரக்கில் உள்ள கொலையாளிகளைக் கொல்லும் ஹீரோவின் டெக்னிக் அப்போதைக்கு புதிய உத்தியாக இருந்ததைப் போலவே இப்போதும் ரசிக்க முடிகிறது. ஆனால் வில்லன்களை சிருஷ்டித்திருக்கும் டெக்னிக்குகள் முப்பது வருடப் பழமையானவை.
வில்லன்களில் ராதாரவி நடிப்பிலும், இந்திரஜித் உருவப் பொருத்தத்திலும் தேறி விடுகிறார்கள். ஆனால் சோடா புட்டிக் கண்ணாடியும், செருகி வைத்த தொப்பையுமாக வரும் சுரேஷை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
தம்பிதான் இரண்டு கொலைகளுக்குக் காரணம் என்று அறியும் ரீமாசென் அவரை ஜெயிலில் போட எவிடென்ஸ் இல்லாமல் தவிக்கிறார். ஆனால் இனி செய்யப்போகும் கொலையைத் தடுக்க அவரை ஜெயிலில் போடுகிறார்.
போலீஸுக்கான அதிகார எல்லைகள் என்ன, ஜெயிலருக்கான அதிகார எல்லைகள் என்ன, ஒருவர் கொஞ்ச நாள் ஜெயிலராக இருந்துவிட்டு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக முடியுமா என்றெல்லாம் நாம் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் 'அதையெல்லாம் மறந்துடுங்க...' என்று களத்தில் குதிக்கிறார் எஸ்.ஏ.சி.
அவர் என்ட்ரிக்குப் பின் நமக்கு சட்டம் பற்றி எந்த சந்தேகமும் வருவதில்லை. அதைத்தான் அவர் கையில் எடுத்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டதே..?
சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் பாங்காக் காட்சிகள் குளுமை. அதேபோல் விஜய் ஆன்டனியின் இசையில் 'ஆதாம் ஏவாள்' இதம்.
படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் முதல் காட்சியில் அறிமுக இயக்குநர் சினேஹா பிரிட்டோவை ரஜினி, கமல், விஜயகாந்த், சிரஞ்சீவியின் கால்களில் விழ வைத்திருக்க மாட்டார்கள். நன்றாக வந்திருந்தாலும் அந்த சீனைத் தூக்கியிருக்கலாம்.
ஆனால் 'ஸ்கிரிப்ட் தன்னுடையது இல்லை' என்று ஆறுதலடைய முடிகிற சினேஹா பிரிட்டோ இன்னொரு விஷயத்திலும் மகிழ்ச்சியடையலாம். இது வெற்றிப்படமாகியிருந்தால் அடுத்தடுத்து 'நீதிக்குத் தண்டனை', 'சட்டப்படி குற்றம்', 'செந்தூரப்பாண்டி' என்று எஸ்.ஏ.சியின் படங்களை மீண்டும் எடுக்க நேர்ந்திருக்கலாம்.
சிக்காமல் தப்பித்தார் சினேஹா..!
-வேணுஜி

No comments:

Post a Comment