
புதிய களங்களில் பயணப்படும் இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் நமக்கு அதிகம் அறிமுகமில்லாத களத்தில்... ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
நாம் அடிக்கடி தினசரிகளில் படிக்கும் ஊருக்குள் யானை புகுந்து மக்களின் உயிரை வாங்கும் கதைதான். அப்படி மலை கிராமங்களில் ஒன்றான 'ஆதி காடு' என்ற இடத்தில் 'கொம்பன்' என்ற வம்பான யானை புகுந்து வருடம்தோறும் சில உயிர்களைப் பலி வாங்க அதை வழிக்குக் கொண்டுவர, பழக்கப்பட்ட கும்கி யானையைக் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள்.
முதல் காட்சியில் முரட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து செய்யும் அட்டகாசங்கள் நம்மை ஒரு வித்தியாச அனுபவத்துக்குத் தயார்ப்படுத்துவது உண்மை. இன்னொருபக்கம் ஒரு பூனைக்குட்டியை வளர்ப்பது போல யானையை வளர்த்து விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார் ஹீரோ விக்ரம்பிரபு.
ஆதி காட்டுக்கு அனுப்ப வேண்டிய கும்கியை, அசந்தர்ப்பமாக அனுப்ப முடியாமல் போக, ஒரு செய்நன்றிக்காக அனுபவமில்லாத தன் யானையை 'கும்கி'யென்று பொய் சொல்லி அந்த ஊருக்குள் பிரவேசிக்கிறார் விக்ரம்பிரபு.

அங்கே ஊர்த்தலைவரின் மகள் லஷ்மிமேனனைப் பார்த்து காதல் வயப்பட, அவரது யானை கும்கியில்லை என்ற உண்மையும், மரபும், கட்டுப்பாடுகளும் மிக்க இடத்தில் அவரது காதலும் வெளியே தெரிந்தால் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்கிற பதைபதைப்பும் 'யானை சவாரி' த்ரில்லாக நம்மை அழைத்துப் போகிறது.
ஹீரோவாகியிருக்கும் 'விக்ரம் பிரபு' நம்பிக்கை வைக்கக் கூடிய அறிமுகமாகியிருக்கிறார். குரல், மாடுலேஷன், தோற்றம் என்று ஒரு நடிகனுக்கு இருக்க வேண்டிய புறத்தகுதிகளுடன், நடிப்பிலும் அமர்க்களப் படுத்தியிருக்கிறார் விக்ரம்பிரபு.
காதல் வயப்படுவதிலும், அந்தக் காதல் கைகூடாது என்ற நிலையில் காட்டும் விரக்தியிலும், கடைசிக் காட்சியில் உணர்வுகளை இழந்து உடைந்து கதறும் காட்சியிலும் தான் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் பிரபுவின் வாரிசு என்ற பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்.
எளிதாகப் பழக முடியாத விலங்கான யானையுடனும் அனாயசமாகப் பழகி நிஜமான பாகன் போலவே அதிசயப் படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. தந்தங்களைப் பிடித்து ஏறி யானைக்கு முத்தமிடும் காட்சி அழகு.
உண்மையில் லஷ்மிமேனன் அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் இது. வெள்ளந்தித்தனமும், விடலைப்பருவமும் கைகோர்க்கும் லஷ்மியின் அழகு முகம் கல்வெட்டாக மனத்தில் நிலைக்கிறது. அருவியின் உச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு அதற்கு உதவும் விக்ரம் பிரபுவின் கன்னத்தில் லஷ்மி இடும் காதலின் அச்சாரம் அமர்க்கள தருணம்.
எல்லா மேட்சிலும் செஞ்சுரி அடிக்கும் 'தம்பி ராமையா' இந்த மேட்சையும் விட்டு வைக்கவில்லை. காமெடியையும், சென்டிமென்ட்டையும் கலந்து தருவதில் பின்னியிருக்கிறார். கரிக்கட்டையாகக் கருகும் கடைசிக் காட்சியில் கண்களை நனைக்கவும் செய்கிறார்.
குணச்சித்திர வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் 'ஜோ மல்லூரி' ஊர்த்தலைவராக வாழ்ந்திருக்கிறார். அவரது குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஜூனியர் பாலையாவின் நடிப்பும் கச்சிதம்.
பாத்திரங்களுக்குண்டான நடிகர்களைத் தேர்வு செய்வதில் எப்போதுமே சோடை போகாத பிரபு சாலமன் இதிலும் வனச்சரகர், ரேஞ்சர், டி.எஃப்.ஓ போன்ற துணைப் பாத்திரங்களுக்குக் கூட மிகப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்கவும் வைத்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி 'மாணிக்கமாக' நடித்திருக்கும் யானையும் ஹீரோவுக்கு நிகரான பாத்திரமாகியிருக்கிறது. "ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு தோணுது. மாணிக்கத்தை பத்திரமா பாத்துக்கோ..!" என்று கும்கி பயிற்சியாளர் 'யார்' கண்ணன் சொல்லும்போது 'மாணிக்கத்தை'ப் பார்க்க நமக்கே பரிதாபமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் அரிய உழைப்பில் 'அருவிக் காட்சிகள்' சர்வதேசப் படங்களிலும் காணாத முயற்சி. இசைஞானியின் நினைவுகளோடு ஒலிக்கும் இமானின் பாடல்களும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
எல்லாம் இழந்துவிட்ட நிலையிம் விக்ரம் பிரபுவின் காதலாவது கைகூடி இருக்கலாமே என்ற எண்ணம் கடைசியில் எழாமலில்லை. அதைப் படம் நிறைவேற்றவில்லை என்றாலும் அதற்கான சாத்தியத்தை ஜோ மல்லூரியின் ஒரு 'குளோஸ் அப்' தருகிறது.
கும்கி - யானைகளில் 'மாணிக்கம்..!'
-வேணுஜி
No comments:
Post a Comment