Tuesday, 30 April 2013

'வத்திக்குச்சி' சினிமா விமர்சனம்


vathikuchiஏ.ஆர்.முருகதாஸுக்கு இந்தி 'துப்பாக்கி' வேலைகள் மற்றும் அடுத்த விஜய் பட ஆயத்தங்கள் என்று பல நெருக்கடிகள் இருந்ததால், 'வத்திக்குச்சி' படக்கதை என்ன, திரைக்கதை என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டார் போலிருக்கிறது. ஹாலிவுட்டின் 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸு'டன் இணைந்து அவரே தன் தம்பி திலீபனை ஹீரோவாக்கி தயாரித்திருக்கும் படம் இது.
ஹீரோ, ஷேர் ஆட்டோ டிரைவர். ஹீரோயின், இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் படிக்கும் பொண்ணு. 'சமத்துவபுர'க் குடியிருப்பில் இருக்கும் இருவரும் காதலிக்கிறார்கள்...' என்கிற ஒன்லைனையும் ஒரே ஒரு ஆக்க்ஷன் சீனும் கேட்டுவிட்டு, அனேகமாக 'ஓகே' சொல்லியிருக்கக் கூடும் ஏ.ஆர்.முருகு.
அந்த சீன் - ஜன சந்தடி மிக்க தெருவில் தன் அப்பாவின் ஏ.டி.எம் கார்டை வைத்து பணம் எடுத்து வருகிறார் ஹீரோ - தன் தங்கை பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைக்கும் ட்ரீட்டுக்காக. அந்தப் பணத்தை கழுத்தில் கத்தி வைத்து பிடுங்கிக் கொண்டு போகிறார் பிரபல தாதா சம்பத். அவரைத் தட்டிக் கேட்கக் கூட முடியாமல் சிட்டியே மிரள்கிறது.
அப்படிப்பட்ட ரவுடி வீட்டைத் தேடிக் கண்டுபிடுத்துப் போய் தன்னிடம் பிடுங்கிய பணத்தைக் கேட்கிறார் ஹீரோ. அவரை அடித்துத் துவைத்துக் கடாசுகிறார்கள். அதோடு போய்விடுவார் என்று பார்த்தால் ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸெல்லாம் செய்து மீண்டும் வந்து அடியாட்களை துவம்சம் செய்து, தன் பணத்தை மீட்பதுடன் சம்பத்தையும் தூக்கிப் போட்டு மிதிக்கிறார் ஹீரோ. அத்துடன் சம்பத் சாம்ராஜ்யம் சரிகிறது.
இது போதாதா..? முருகதாஸின் மனக்கண்களில் தன் தம்பி திலீபன் ஒரு ஆக்க்ஷன் ஹீரோவாக ஆகிவிட்டதாகவே தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு மட்டுமல்ல. மேற்படி விஷயங்களைக் கேட்கும் எல்லோருக்குமே அப்படித்தான் தோன்றும். ஆனால் அதற்கெல்லாம் நியாயமும், வலுவும், சேர்க்கக் கூடிய அறுபது, எழுபது காட்சிகளை அழகாக எழுதியாக வேண்டுமே..?
'நன்றாக சாப்பிட வேண்டும். ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸ் செய்து உடம்பை ஏற்ற வேண்டும். அப்போதுதான் யாரையும் அடிக்க முடியும்..!' என்பதுதான் சுற்றி சுற்றி வந்து படம் முழுக்க டைரக்டர் 'கின்ஸ்லின் சொல்லும் செய்தி.
ஆரம்பிக்கும் எந்தக் காட்சியையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் நீட்டிக்கொண்.........டே போகிறார். 'ஹீரோவைக் கொல்ல நினைக்கிறார் ஒருவர்...' அல்லது 'யாரோ யாரையோ கொல்ல நினைக்கிறார்கள்...' என்று ஒரு மேட்டரைப் பிடிக்கிறார். எப்படிக் கொல்ல நினைக்கிறார்கள் என்று எட்டு சீன். அதற்கு எப்படித் தயாராகிறார்கள் என்று ஒரு எட்டு சீன். ஏன் கொல்ல நினைக்கிறார்கள் என்று எட்டு சீன். எப்படி ஹீரோ தப்புகிறார் அல்லது அதைத் தடுக்கிறார் என்று அடுத்த எட்டு சீன். 'போதும்டா சாமி' என்று ஆகிவிடுகிறது.
கிளைமாக்ஸில் வில்லன்கள் ஒரு நாள் முழுக்க ஹீரோவை 'வைத்திருந்து' கொல்ல நினைக்கிறார்கள். ஹீரோவை வைத்துக் கொண்டு எங்கெங்கோ அலைந்து ஒரு மலை உச்சிக்குக் கூட்டி செல்கிறார்கள். ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டராவது 'ஏன்?' என்று கேட்டிருக்க வேண்டாமா..?
vathikuchi
அந்த நீண்ட நெடிய பயணத்தில் இரண்டு இடங்களில் ஹீரோ 'எஸ்' ஸாகிறார். ஆனால், மீண்டும் பிடிபடுகிறார். அந்த இரண்டு வேளைகளிலும் அவர் என்ன செய்தார் என்று கடைசியில் சொல்கிறார்கள்.
ஒரு சீனில் டயர்டாக இருப்பதால் நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்கிறாராம். இன்னொரு 'எஸ்'ஸில் ஓடுகிற ஓட்டத்தில் ஒரு கடையில் பிரியாணி வாங்கிச் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் அவசர அவசரமாக கொஞ்சம் எக்சர்சைஸ் செய்கிறாராம்.
அடுத்த படம் கிடைத்து 'கின்ஸ்லின்' ஆக்க்ஷன் கதையே சொல்ல ஆசைப்பட்டால் உண்மையான சண்டைக்காரன் கதை ஏதாவது கேட்டுத் தெரிந்து கொண்டாவது ஸ்கிரிப்ட் எழுதுவது நலம்.
முருகதாஸின் தம்பியாக ஆகிவிட்டதால் ஈஸியாக 'என்ட்ரி பாஸ்' வாங்கி ஹீரோவாகி விட்டார் திலீபன். அடிக்கும் காட்சிகளில் ஓகே. நடிக்கும் காட்சிகளைப் பற்றி டைரக்டரே அவரை சிரமப்பட விடவில்லை.
படத்தின் ஆறுதலாக 'கொழுக், மொழுக்' அஞ்சலி. வாயாடிக் கொண்டும் "நீ என்னைக் காதலிக்கிறேன்னா காதலிச்சுக்கோ... ஆனா நான் உன்னைக் காதலிக்க மாட்டேன்..." என்று பிகு பண்ணுகிற அழகை ரசிக்கலாம். ஆனால், காதலில் ஆழம் இல்லாமலும், பேசுவதையே சதா பேசிக் கொண்டும் இருப்பதால் ஒரு கட்டத்தில் அஞ்சலியையும் ரசிக்க முடியாமல் போகிறது.
சம்பத், ரவி மரியா, ஜெயப்பிரகாஷ், பட்டிமன்றம் ராஜா, ஸ்ரீரஞ்சனி எல்லோரும் பல படங்களில் செய்ததையே திரும்பவும் செய்திருக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. பெரிதும் நம்பிக்கை வைத்து ஏமாற்றிய இன்னொருவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'குறு குறு...' ஒரு பாடல் மட்டும் ஓகே..!
நிறைய நம்பி ஏமாந்தது நாம் மட்டுமல்ல... 'ஹாலிவுட்' டில் அப்பாடக்கர் டைரக்டர்களுக்கே ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால்தான் சான்ஸ் கொடுப்பார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸு' ம்தான்..!
ஆனாலும் என்ன, 'பெரி...ய்ய்ய்ய்...ய...' பேனர் என்பதால் 'படம் அமோக வெற்றி' என்பார்கள். 'சக்சஸ் மீட்' வைப்பார்கள். 'படம் இந்திக்குப் போகிறது. அக்க்ஷய் குமார் ஹீரோவாகிறார்...' என்பார்கள் - அவர்களால் அது முடியும்.
-வேணுஜி

No comments:

Post a Comment