
கல்லூரிப் பருவத்தில் ஜீவாவுக்கும், சமந்தாவுக்கும் வரும் காதல் அப்போதைக்கு வந்ததில்லை, அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பித்துப் பிரிந்து, உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் துளிர்த்துப் பிரிந்து மீண்டும் கல்லூரியில் தொடர்கிறது. அது மீண்டும் என்னவாகிறது என்பதை நீட்டி முழக்கி... சீட்டை சூடாக்கிச் சொல்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
மூன்று பருவங்களில் ஜீவாவையும், சமந்தாவையும் வித்தியாசப் படுத்தியிருப்பது படத்தின் ஹைலைட். அதிலும் உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் ஜீவாவையும், சமந்தாவையும் காட்டியிருப்பது இந்திய சினிமாக்களிலேயே அற்புதக் காட்சி என்று சொல்ல வேண்டும்.
மூன்று நிலைகளிலும் தெரியும் ஜீவாவின் பரிமாணப்பட்ட நடிப்பு பாராட்ட வைக்கிறது. உடலைப் பள்ளிப் பருவத்துக்கேற்றது போல் மாற்றிக் கொண்டிருப்பதிலும், ஹேர்கட், பாடிலாங்குவேஜ் என்று அனைத்து நிலைகளிலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதிலும் தனித்துத் தெரிகிறார் ஜீவா.
பள்ளி மாணவியாக வரும் சமந்தாவுக்கு ஆளைக் காட்டியே ஸ்கூலில் அட்மிஷன் வாங்கி விடலாம். ஆள் சிறுத்து, ஆடை சிறுத்துத் தெரிவதோடு தன்னை டீ வாங்கிக் கொடுக்க ஜீவா அழைத்ததும் தன் தோழிகளைப் பெருமையோடு பார்க்கும் பார்வையில் 'செம க்யூட்..!'
அத்தனை எதிர்பார்ப்புகளையும் உள்ளேயே அடக்கி வைத்திருந்து கிளைமாக்ஸில் ஜீவா கைநழுவிப் போனதும், அக்காவிடம் உடைந்து கதறும்போது நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.
சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பலைகளால் நிறைகிறது தியேட்டர். "சுடிதார் சாயம் போனாதான் பேன்ட் சட்டையைத் தேடி வருவே, இல்ல..?" என்று காதலே கதியாக அலையும் ஜீவா, தன்னைத் தேடி வரும்போது போட்டுப் பார்ப்பதில் கலாய்க்கிறார்.
சந்தானத்தின் காதலும், சமந்தாவின் குண்டு பிரண்டுடன் அமைவது 'வி.தா.வ' வின் காமெடி வெர்ஷன். ஆணோ, பெண்ணோ குண்டாக இருந்தால் அவர்கள் காமெடிக்குதான் லாயக்கு என்கிற சினிமா தத்துவத்தை கௌதம் மேனனும் மீற முடியாதது பரிதாபம்.

அந்தந்த பருவத்தின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பதில் கௌதம் மேனனுக்குள்ளிருக்கும் எழுத்தாளர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். பள்ளியில் தன்னை விட்டு இன்னொருவனை 'ப்யூப்பிள் லீடரா'க்கியதற்கு வெளியே காட்டாமல் தன் வெறுப்பை ஜீவா வெளியிடுவதும், "அதுக்காக நான் லீடரானதுக்கு சந்தோஷப்பட மாட்டியா..?" என்று சமந்தா கேட்பதும் அவர்களது மன இடைவெளியின் அழகான வெளிப்பாடுகள்.
எப்போதும் வீட்டுக்குத் திரும்பும்போது தன்னை அழைத்துச் செல்லும் சமந்தா வராமல் போனதும், ஏன் வரவில்லை என்று அவர் கேட்கப் போக, "நீ போயிருப்பேன்னு நினைச்சேன்..." என்று சமந்தா சொல்வதும், "போயிருக்கணும்னு நினைச்சியா..?" என்று பதிலுக்கு ஜீவா கேட்பதும் தேர்ந்த வசனங்கள்.
இருந்தும் படம் நெடுக இப்படியே போய்க்கொன்டிருப்பதில் ஒரு வித அலுப்பு மேலிடுகிறது. அதிலும், கிளைமாக்ஸில் வைத்து மாற்றி மாற்றி இருவரும் பேசிக் கொண்டே இருப்பது 'போதும்டா சாமி' என்றாகி விடுகிறது.
மொத்தக் கதையில் சமந்தாவின் லாஜிக்குகளும், அவரது எதிர்பார்ப்புகளும் நியாயமானதாகவே இருக்க, ஜீவாதான் ஆணாதிக்க மனப்பான்மையுடன் அவரைப் போட்டுப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. தன் குடும்ப சூழலை திடீர் ஞானோதயத்தில் நினைத்துப் பார்த்து காதலனே கதியாக இருக்கும் ஒரு பெண்ணை அவர் தவிர்க்கும் விதமாகவே நடந்து கொள்வது 'மேல் சாவனிஸம்'தான்..!
இன்னொரு பெண்ணிடம் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு, ஊர் கூடி ரிசப்ஷன் நடத்தி திருமணம் நடக்கவிருக்கும் ஒருமணி னேரம் முன்பு போய் அந்தத் திருமணத்தை நிறுத்துவதும்கூட அதே சாவனிஸம்தான்..!
அந்தக்கால நடிகை அழுகாச்சி விஜயகுமாரி போல, சமீப காலத்தில் காதலுக்காக இவ்வளவு அழுத நடிகை சமந்தாவாகத்தான் இருக்க முடியும். கடைசி ஒரு மணி நேரத்தில் பிழிந்து பிழிந்து அழுகிறார். இந்தக் காலப் பெண்கள் தங்கள் காதலில் இவ்வளவு வீக்காகவா இருக்கிறார்கள் மிஸ்டர் மேனன்..?
இளையராஜாவின் இசையில் அவர் காலத்திய நவீன இசையான 'போனி எம்'மின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நான்கு பாடல்கள் ரசனையுடன் ஒலித்தாலும், கௌதம் மேனன் பட பாணியிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. பின்னணி இசை வழக்கம்போல் நேர்த்தி.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இயல்பான சினிமாவைக் காட்ட அதிகம் மெனக்கெடாமல் இயங்கியிருக்கிறது.
அடுத்தடுத்து பிரிந்த, சேர்ந்த காதல் கதைகளாகவே சொல்லிவிட்ட கௌதம் வாசுதேவ் மேனன் கொஞ்ச காலத்துக்கு காதல் கதைகளின் பக்கம் போகாமலிருப்பது நல்லது.
நீ.எ.பொ.வ - முன்பாதி லவ்வு... பின்பாதி ஜவ்வு..!
-வேணுஜி
No comments:
Post a Comment