Sunday, 3 August 2014

சரபம் சினிமா விமர்சனம்

சுலபமாகப் பணம் சம்பாதிக்க வழியில்லாத சில பல ஆண்டுகளுக்கு முன்னால் குறுக்கு புத்திசாலிகள் ‘சுலபமாகப் பணம் சம்பாதிப்பது எப்படி..?’ என்று புத்தகம் போட்டு ‘பைசா’ பார்த்து வந்தார்கள். இப்போது சுலபமாகப் பணம் சம்பாதிக்க ஏகப்பட்ட வழிகளை சினிமாக்களே சொல்லித்தர ஆரம்பித்து விட்டன.
‘கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை தேட்டை போடுவது எப்படி..?’, ‘பேய்க்கதை சொல்லி பல கோடி மதிப்புள்ள வைரத்தை ஆட்டையைப் போடுவது எப்படி..?’, ‘வங்கிப் பணத்தை வெளியே கொண்டு வந்து டபுளாக்குவது எப்படி..?’, ‘இன்சூரன்ஸ் பணத்தை நிறுவனத்தின் கண்ணில் மண்ணைப் போட்டு சுருட்டுவது எப்படி..?’, ‘மல்டி லெவெல் மார்க்கெட்டிங்’, ‘மண்ணுளிப்பாம்பு சீட்டிங்’ என்று பத்தில் நான்கு படங்கள் இப்படி ஊரார் பணத்தை சுருட்டச் சொல்லித் தருகின்றன.
அந்த வரிசையில் சுபலமாகப் பணம் பண்ணும் ஒரு ஜோடியின் கதை இது. ஆனால், இதில் பொதுமக்களையோ, வங்கியையோ ஏமாற்றாமல்… ஆனால், அப்படி ஏமாற்றி சேர்த்த சொத்தை, ஹீரோவும், ஹீரோயினும் ஏமாற்றி அபகரிக்கிறார்கள். அந்த வகையில் திருப்தி அடையலாம். ஆனால், ஏமாற்றி சேர்த்த சொத்தை ஏமாற்றி அடையலாம் என்று இ.பி.கோவில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்ன..?
ஆனால், இந்த நியாய தர்மங்களைத் துக்கிப் போட்டு விட்டு த்ரில்லாக ஒரு படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மோகன்.
மாட்டிக் கொள்ளாமல் ‘துட்டு’ கிடைக்கும் என்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இருக்கும் நாயகன் நவீன் சந்திரா ஒரு ஆர்க்கிடெக்ட். தன்னை அவமானப்படுத்திய தொழிலதிபர் நரேனைப் பழிவாங்க ‘குவாட்டர்’ வழி கூடக் கிடைக்காமல் குமைந்து ‘ஃபுல்’ அடித்துக் கொண்டிருக்கிறார்.
மட்டன் கடைக்குக் கிளம்பும் நேரத்தில் மஜீத் பாய் வீட்டு ரம்ஜான் பிரியாணி வீட்டுக்கே பார்சல் வந்தது போல் அந்த நேரம் பார்த்து நரேனின் மகள் சலோனி அப்பாவுக்குத் தெரியாமல் அந்தா பெரிய வீட்டிலிருந்து ‘எஸ்’ ஆக, அவரைச் சந்திக்கும் நவீனிடம் அடைக்கலம் கேட்கிறார்.
செலவுக்குப் பணம் தராத அப்பாவைப் பழிவாங்கும் மூடில் ‘சலோனி’யும் இருக்க… அவர் ஐடியாப்படியே ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நினைத்தபடியே எல்லாம் நடந்து 30 கோடி கைக்கு வந்துசேர… சலோனியைத் திட்டமிட்டபடியே அவர் அப்பாவிடம் நவீன் அனுப்ப… டிவி சேனலில் சலோனி கொல்லப்பட்ட செய்தி வருகிறது – இடைவேளை..!
sarabham படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட நாற்பது நிமிடம் என்னதான் கதை சொல்லப்போகிறார்கள் என்றே தெரியாமல் நகத்தைக் கடித்து விரல் புண்ணான நமக்கு அந்த ‘சூது கவ்வும்’ கடத்தல் டிராமா சுமாரான சுவாரஸ்யத்தை மட்டுமே தர, இன்டெர்வல் ‘ட்விஸ்ட்’ மட்டுமே முதுகெலும்பை நிமிர்த்துகிறது.
அதற்குப்பின் பார்த்தால் நவீனின் வீட்டு காலிங் பெல் அடிக்க… போய்த் திறந்தால் சலோனி உயிருடன் நிற்கிறார் – கூடவே அவர் அப்பா நரேனும்..! ‘அடடா… அடடா…’ என்று நிமிர்ந்தே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால்… அது இவர் இல்லை… இதுவரை சொல்லப்பட்ட கதையில் உண்மை இல்லை… என்று வேறு ஒரு கதை சொல்கிறார்கள்.
படம் முடியும் நேரத்தில் இன்னொரு ட்விஸ்ட் போட்டு அதுவும் அவர் இல்லை… அதுவரை சொல்லப்பட்ட கதையிலும் உண்மை இல்லை… என்று இன்னொரு கதை சொல்லி முடிக்கிறார்கள். கதையை மாற்றிக் கொண்டே இருப்பதில் ஒரு கட்டத்தில் “அட போங்கப்பா…” என்றாகி விடுகிறது...

இருக்கு ஆனா இல்ல சினிமா விமர்சனம்

என்ன இருக்கு? என்ன இல்ல..? எல்லாம் ஒன்றேதான். அது ஆவி. அமானுஷ்ய ஆவிக்கும், திட மனுஷனுக்கும் இடையில் ‘ஒரு காதலும் இருக்கு… ஆனா இல்ல…’ என்றும் கொள்ளலாம்.
விபத்து ஒன்றில் தன் கண்முன்னாலேயே இறக்கும் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும் கதாநாயகன் அந்தப் பெண்ணை வீட்டிலும் பார்க்கிறான் – ஆவியாக. அல்லோலகல்லோலப்பட்டு அந்த இரவைக் கழித்தால், மீண்டும் மீண்டும் அதே ஆவி, இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வருகிறது.
ஒருகட்டத்தில் பயமுறுத்துவதை நிறுத்திவிட்டு அந்த ஆவி, ஹீரோவிடம் தான் வந்த விஷயத்தை ஓப்பன் செய்கிறது. அதன்படி, ‘தான் யார்..?’ என்று கண்டுபிடித்துத் தரச் சொல்கிறது. அதுவரை ஒழுங்கற்றுக் கிடந்த ஹீரோவின் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது. இதனால் ஹீரோவுக்கும் ஆவி மீது ஒரு காதல் அரும்புகிறது. ஆவியால் ஸ்மார்ட்டாக மாறிவிட்ட ஹீரோவை அலுவலகத்தில் இன்னொரு பெண்ணும் ‘லவ்’வ ஆரம்பிக்கிறாள்.
அந்தக் காதல்கள் என்ன ஆகிறது என்பதைத் தாண்டி மனித உறுப்புகளைத் திருடி விற்கும் அபாய மருத்துவமனைகள் பற்றியும் ‘அலர்ட்’ செய்கிறார் இயக்குநர் கே.எம்.சரவணன்.
Irukku aana Illa‘விவந்த்’ ஹீரோவாக, ‘ஈடன்’ ஹீரோயினாகிறார். வழக்கமாக ஆவி என்றால் ‘அகோர’ மேக்கப்தான் போட வேண்டும் என்ற லாஜிக்கை மாற்றி ஆவியை அட்டகாச மேக்கப்பில் இயக்குநர் காட்டியிருப்பதால் ‘ஈடன் தோட்டத்து ஆப்பிள்’ போலவே இருக்கிறார் ஆவியாக வரும் ஈடனும்.
அதனால், ஆவியை யாராவது காதலிப்பார்களா என்று யாரும் கேள்வி கேட்க முடியாமலும் செய்திருக்கிறார். நமக்கே ஒரு கட்டத்தில் ஈடனைக் காதலிக்கத் தோன்றுகிறது. (என்ன ஒன்று … ஒரே காஸ்ட்யூமில் வருவதில் மட்டும் சின்ன அலுப்பு…)
இயக்குநர் எந்தக் கடிவாளமும் போடாததால் விவந்த் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஆவி மாற்றத்தால் ஸ்மார்ட் ஆக ஆனதும் அவரைப் பார்க்கலாம் போலிருக்கிறது. அவரது நண்பனாக வரும் ஆதவன் நகைச்சுவைக்காம். அவர் வராமல் இருந்தாலே படத்தை ரசிக்க முடிகிறது.
படமெல்லாம் நிரம்பி இருப்பது ‘ஆவி’ ஈடன்தான். மறைந்த ஸ்ரீவித்யாவின் ஆவியோ என்று நினைக்க வைக்கும் கண்கள் ஈடனுக்கு. ஒரு சாயலில் ஸ்ரீவித்யாவின் இளவயதை ஒத்திருக்கிறார். இன்னும் மெலிந்தால் த்ரிஷா சாயலுக்கு வரலாம் ஈடன். மருத்துவமனையில் கோமாவிலிருக்கும் அவரது சகோதரியாக ஈடனுக்கு இன்னொரு வேடமும் இருக்கிறது படத்தில். அது ஏன் என்பது ‘கிளைமாக்ஸ்’ சுவாரஸ்யம்.


மருத்துவராக வரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மேக்கப் போட்டவருக்கு தண்டனையாக ஒருவாரம் அந்த ஒய்.ஜி.மகேந்திரன் கெட்டப் போட்டோவுடன் மட்டும் தனியறையில் அடைத்து வைக்கலாம். அவ்வளவு கொடுமை..! உறுப்புகளைத் திருடும் மருத்துவமனையின் டாக்டர் ஒருவர், தங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒய்.ஜி.எம்மை “ஃப்ரெஷ் பீஸ்…” என்று அழைப்பது அதைவிடக் கொடுமை..! (உன் கிட்னியைக் காக்காய் தூக்கிட்டுப் போக…)

வேலையில்லா பட்டதாரி – சினிமா விமர்சனம்

வேலைக்குப் போகாமல் ‘தண்டச்சோறாக’ அப்பாவிடம் அர்ச்சனை வாங்கும் படங்கள் ஆறேழில் தனுஷ் நடித்திருக்கிறார் என்றாலும், தன் 25வது படமான இதில் அவர் ஏற்றிருக்கும் அதே வேடம் கொஞ்சம் பிரத்யேகமானது.
இந்நாட்டு இளைஞர்களின் முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொட்டு அவரை நடிக்க வைத்திருப்பதில் கவனம் பெறுகிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ்.
பொதுவாக ‘எஞ்சினீயரிங்’ படிப்பே இனி வேலைக்கு ஆகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், குறிப்பாக ‘சிவில் எஞ்சினீயரிங்’ (கட்டடப் பொறியியல்) படித்த லட்சோபலட்சம் இளைஞர்களின் எதிர்காலம்..?
அப்படி ஒரு பற்றியெரியும் பிரச்சினையைத் தொட்டிருப்பதற்காகவே இயக்குநருக்கு ‘சபாஷ்’ போடலாம். அந்த வகையில் இந்த ‘தண்டச்சோறு’ ஸ்பெஷல் மணம், குணம், சுவையுடன் சூடாகப் பரிமாறப் பட்டிருக்கிறது. அதனுடன் இரண்டு பிள்ளைகள் இருக்கக்கூடிய நடுத்தரவர்க்கக் குடும்பத்துக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் சரிவிகித ‘சைட் டிஷ்’ ஆக சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.
அதேபோல் இன்னொரு சுவாரஸ்யம், தனுஷின் ரசிக்கத்தக்க சினிமா அப்பாக்களான (மலையாள) முரளி, ரகுவரன் வரிசையில் இதில் சமுத்திரக்கனி.
வேலையில்லாத மகனைக் கரித்துக் கொட்டுவதையே பிரதான வேலையாகக் கொண்டிருக்கும் அவர், பக்கத்து வீட்டில் விழுந்த பந்தை எடுத்துக் கொண்டு வரும் தனுஷைப் பார்த்து, “இதே மாதிரிதான் பதினாறு வயசிலயும், பக்கத்து வீட்ல இருந்து பந்தோட வந்தே… அப்பவாவது உன்னோட விளையாட பத்துப் பசங்க இருந்தாங்க. இப்ப அவங்களும் வேலைக்குப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்ப தனியா விளையாண்டுகிட்டு இருக்கே..?!” என்பது நடுத்தர வீடுகளில் அன்றாடம் கேட்கப்படும் ‘தேசிய சோகம்..!’
அத்தனைத் திட்டுகளையும் தாண்டி, மகன் மேல் உள்ளுற வைத்திருக்கும் ஊமைப் பாசத்தில் ‘ஆழ’ சமுத்திரமாகிறார் அசத்தல் கனி..!
CS 17_07தனுஷைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுப் பையனின் சாயலையும் தாண்டி நம் வீட்டுப்பையன் போலவே அத்தனை இயல்பு. வேலைக்குப் போகும் தம்பியைக் காட்டி அப்பா திட்டுவதை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், “அவனை மட்டும் பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சுட்டு என்னை சாதாரண ஸ்கூல்ல படிக்க வச்சீங்களே..? நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேச எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமா..?” என்று அவர் பொங்குவதன் நியாயம் புரிந்து ரசிக்கலாம்.
கூடவே, “அவனுக்கு ‘கார்த்திக்’ன்னு ஹீரோ பெயர். எனக்கு ‘ரகுவரன்’னு வில்லன் பெயர்..!” என்று அவர் பொருமுவதையும் ரசித்துச் சிரிக்கலாம். அம்மாவிடம் துடைப்பத்தில் அடிவாங்குவதிலாகட்டும், தம்பியை ‘டிராப்’ பண்ணிவிட்டு இருபது ரூபாய் கூலி வாங்கிக் கொள்வதிலாகட்டும்...


சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

“இந்த சமுதாயம் எனக்கு என்ன செய்ததோ அதையே அந்த சமுதாயத்துக்கு நான் திருப்பிச் செய்கிறேன்…” என்கிற அடாவடி ஹீரோவை “அன்பைக் கொடு… அதையே திரும்பப் பெறுவாய்…” என்கிற ஹீரோயின் மாற்றும் கதை.
இதை இந்த அளவுக்கு சீரியஸாகச் சொல்லாமல் ‘பஜார்ல உஜாரா இல்லேன்னா நிஜாரை அவுத்துருவானுங்க…’ என்ற அளவில் நிஜத்துக்கு நெருக்கமாக ஒரு மெசேஜையும் வைத்து இயல்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் எச்.வினோத்.
‘இளிச்சவாயன்கள் இருக்கும் ஊரில் ‘இடிச்சபுளி செல்வராஜ்’ கூட நாட்டாமைதான்’ என்கிற அளவில் ஊரில் என்னென்ன எத்துவாளித்தனங்கள் நடக்கின்றனவோ அவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து காசு பார்க்கும் ஹீரோவைப் பற்றிய கதை.
‘மண்ணுளிப்பாம்பு’ தொடங்கி ‘எம் எல் எம்’, ‘ஈமு கோழி’, ‘தங்க நகை ஆஃபர்’, மற்றும் ‘ரைஸ் புல்லிங்’ வரை ஏமாறும் மக்களுக்கு ஆப்பு வைக்கும் பாத்திரத்தில் வருகிறார் ஹீரோ ‘நட்டி’ என்கிற நட்ராஜ் சுப்ரமணியம்.
அன்றாடம் இப்படி ஏதோ ஒரு அவலம் நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்க, அவற்றின் காரணகர்த்தாவாக வரும் நட்டி, நமக்கு நன்றாக அறிமுகமானவரைப் போல் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ‘அண்டப்புளுகு ஐடி கார்டு’ காட்டி நம்மருகே வந்து உட்கார்ந்து கொள்கிறார். ‘கேப்பையில் நெய்யுடன் சேர்த்து ஆலிவ் ஆயிலும் வழிகிறது…’ என்று அவர் சொன்னால் அதை நாம் நம்பியே ஆக வேண்டும் போல் அவ்வளவு சொல்சுத்தம்.
“கத்தியில்லாம ரத்தம் பாக்காம, காசு பாக்க பல வழிகள் இருக்கு… அதுல நான் ஒண்ணை உங்களுக்குச் சொல்லித்தரேன்…” என்று ஆரம்பித்து ஒரு குற்றத்துக்குத் திட்டம் தீட்டுவதிலும், “என் ப்ளான் என்னன்னு உனக்குப் புரிஞ்சுதா..?” என்று ஒரு மொக்கை ரவுடியிடம் கேட்டு அவன் “இல்லை…” என்று சொன்னதும் “உனக்கே புரிஞ்சுடுச்சுன்னா வேற ப்ளான் யோசிக்கலாம்னுதான்…” என்று அதைத் தீட்டிக் கூர் பார்ப்பதிலுமாக நட்டி, ‘சம்திங் நாட்டி.’ [அவரது பாத்திரப் பெயர் 'காந்தி பாபு' (!)]
Sathuranga Vettai‘பலநாள் திருடன்…’ பழமொழியாக ஒருநாள் பொறி வைத்துப் பிடிக்கிற போலீஸிடமும் அசராமல் அவர், “ஏமாறனும்னு வர்ர மக்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் சார்…” என்று சர்வ அலட்சியமாகச் சொல்வதில் தொடங்கி, போலீஸின் அத்தனை ‘கவனிப்புகளை’யும் கடந்து கோர்ட்டிலிருந்து விடுதலை ஆகும்போது ‘கெத்து நடை’ காட்டுவது வரை நட்டியின் கம்பீரம் அபாரம்..!
ஏமாற்றுவதையே மூச்சாகக் கொண்ட நட்டியையே “நீங்க ரொம்ப நல்லவர் ஸார்…” என்று நேர்மறையாகப் பார்த்து ஒருதலையாய்க் காதல் கொள்ளும் இஷாரா படத்தின் நாயகி என்பதைத் தாண்டி இன்னொரு ஹீரோவாகவே தெரிகிறார். காரணம், படத்தின் அடிநாதம் இஷாரா மேலேயே ஏற்றப்பட்டிருக்கிறது.
ஊர் ஊராகத் துரத்தித் துரத்தி அடித்து உதைக்கப்பட்டு ரத்தச் சகதியில் இருக்கும் தனக்கு சிகிச்சை அளிக்கும் இஷாராவிடம், “என் மேல உனக்குக் கோபமே இல்லையா..?” என்று நட்டி கேட்க, “உங்க அம்மா உயிரைக் காப்பாத்த யாராவது பணம் கொடுத்திருந்தா நீங்க இப்படியெல்லாம் தப்பு பண்ணியிருக்க மாட்டீங்க இல்ல..?” என்று பதில் சொல்லி அவருக்குள்ளும் இருந்து புனிதனை மீட்டெடுக்கும் இஷாரா, இளவயது தெரசா..!
மண்ணுளிப்பாம்புக்கு ‘இளைய தளபதி விஜய்’ என்று நட்டி வைக்கும் பெயரில் மகிழ்ந்து, சத்தம் கேட்டால் பாம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று கார் ஸ்டீரியோவைக்கூட பாய்ந்து ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யும் அப்பாவிச் செட்டியாராக இளவரசு வருவது கொஞ்ச நேரமே ஆனாலும்…