Sunday, 13 July 2014

பப்பாளி சினிமா விமர்சனம்

தலைப்பில் எந்த சங்கதியும் இல்லை. ‘லோ பட்ஜெட் படம்’ என்பதைத்தான் இப்படி ‘லோ பட்ஜெட் பழத்தை’ வைத்துச் சொல்லியிருப்பாரோ இயக்குநர் கோவிந்த மூர்த்தி…?
டெல்லியில் ஆரம்பிக்கும் படத்தில் நாயகன் செந்தில், நம்மிடம் கதை சொல்ல ஆரம்பிக்க, சென்னையில் விரிகிறது பிளாஷ்பேக். தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் இளவரசுவின் மகன்தான் செந்தில். அப்பாவுக்கு ‘விருதுநகர் பவன்’ என்ற பெயரில் பல கிளைகளுள்ள ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டுமென்பது கனவு.
அதற்காக, மகனிடம் படிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு தன் டிபன் கடையை முன்னேற்ற உதவி செய்யச் சொல்கிறார். ஆனால், செந்திலோ ஓயாமல் படித்துக்கொண்டே இருக்கிறார். அப்படி என்ன படிக்கிறார் என்கிறீர்களா..? அதையும் சொல்லிவிட்டால் இன்டெர்வல் பாய்ண்டில் சுவாரஸ்யத்துக்கு வேறு விஷயங்களில்லை என்பதால் அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் சீரியஸ் விஷயமும் அதுதான் என்பதால் ‘எங்கே செல்லும் இந்த பாதை..?’ என்று இலக்கில்லாமல் நகர்கிறது முன்பாதிப்படம். நண்பன் ஜெகனுடன் சேர்ந்து பெண்கள் பின்னால் அலைவதைவிட வேறொன்றும் செய்யவில்லை செந்தில்.
காதல்…காதல்… என்று இருவரும் அலையும் முன்பாதியில் செந்தில் விருப்பப்படியே ‘தோல் சீவிய பப்பாளி’ போல ஹீரோயின் இஷாரா அறிமுகமாகிறார். அவர் ஓட்டி வரும் ‘டிவிஎஸ் 50′ சாலையில் தடுமாறி விழ, அவர் வாங்கி வரும் பப்பாளிப்பழமும் கீழே விழுகிறது. (இதுதான் தலைப்புக்குப் படத்தில் இருக்கும் ஒரே சம்பந்தம்)
பிறகு… இருவரும் அலுக்க அலுக்க இன்டெர்வல் வரும்வரை காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்… காதலி…க்க்கி…றார்…கொர்…கொர்…கள். இஷாராவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், அப்பா நரேனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால் மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்ட… புதிதாய் முளைக்கிறது பிரச்சினை, செந்திலுக்கு இருக்கும் லட்சியம் தொடர்பாக. அதுவரை அவர் என்ன படிக்கிறார் என்கிற ரகசியமும் அதன்மூலம் உடைகிறது – அவர் ஐ.ஏ.எஸ் ஆக விரும்புகிறார்.
ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி பிரச்சினையாக முடியும் என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள். அதை வைத்துதான் அடுத்த பாதிப்படத்தை ஓட்ட இயக்குநர் நினைத்திருந்ததால்… அது பிரச்சினைதான். தலையைச் சுற்றிக் காதைக் கடந்து மூக்கைத் தொட்டு ஒரு பிரச்சினையை இன்டர்வெல்லில் சொல்கிறார் இயக்குநர்.
நாம் ‘ரெஸ்ட் ரூம்’ போய் வந்ததும், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அடுத்தடுத்த காட்சிகளில் விளக்கி, காதலர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விடுகிறார்கள் சரண்யா – நரேன் தம்பதி. அப்புறம் என்னய்யா பிரச்சினை என்கிறீர்களா..?
pappaliபடிக்கும் உங்களுக்கே இந்தக் கடுப்பு வந்தால் பார்த்த எங்களுக்கு..? பின்பாதிக் கதைக்கான பிரச்சினையை இளவரசு கையிலெடுத்துக் கொள்கிறார். தன் ஹோட்டல் கனவைப் பாழ் பண்ணிய மகனை வீட்டை விட்டுத் துரத்தி, அவன் ஐ.ஏ.எஸ் ஆகக் கூடாதென்று மனதார மண்தூற்றி தினமும் வந்து சாபம் விட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த வெறியில் மகன் படித்து ஐ.ஏ.எஸ் ஆக, விடு ஜூட்..!
படம் முடிந்ததும், ‘மருமகனை ஐ.ஏ.எஸ். ஆக்கிய மாமியாரின் கதை இது…’ என்கிற ஒன்லைன் ஒருமாதிரி புரிந்துவிடுகிறது. அது சத்தியமாகத் தமிழில் இதுவரை வராத கதைதான்.
தன்னால் என்ன முடியும் என்பதை செந்திலும், அவரால் என்ன முடியும் என்பதை இயக்குநரும் புரிந்து வைத்திருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செந்தில் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னால் ஐ.ஏ.எஸ்.ஆக முடியாது என்று மனைவி, மாமியாரிடம் அவர் உடைந்து அழும் இடம் நெகிழ வைக்கிறது.
ஒட்டு ‘மொத்த’ப் பார்வைக்கு விளைந்த ‘பப்பாளி’ போலிருக்கும் இஷாரா, குளோசப்பில் காண்பித்தால், ‘ப்ப்ப்ப்பா..!’ என்றிருக்கிறார். அதென்னமோ தெரியவில்லை, செந்தில், இஷாரா, காமெடியன் ஜெகன் என்று ஒவ்வொருவருக்கும் குளோஸ் அப்களாக வைத்துத் தள்ளி பயமுறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்.
வழக்கமாக ஹீரோவின் அம்மாவாக வந்து அவன் காதலுக்கு உதவும் சரண்யா பொன்வண்ணன் இதில் மாறி ஹீரோயினின் அம்மாவாக வந்து அதேபோல் காதலுக்கு உதவி செய்கிறார். சற்றே அலுக்க வைக்கும் பாத்திரப்படைப்பு என்றாலும் சரண்யா போனில் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!
எந்த அப்பா தன் மகன் கலெக்டர் ஆவதை விரும்ப மாட்டார்..? ஆனால், ‘உன்னைப் படிக்க விட்டேனா பார்…’ என்று இளவரசு செய்யும் அலம்பல்களுக்கு முகாந்திரம் இல்லாததால் அவர் நடிப்பு ‘ஓவர் லோட்…’ ஆகிப் போகிறது..!



ராமானுஜன் சினிமா விமர்சனம்

வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜுனை இந்திய சினிமாவும் காலம் காலமாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்தக் குறையைத் தீர்க்கக் களமிறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார் தமிழ்த்திரையுலகம் மெச்சக் கூடிய இயக்குநர் ஞானராஜசேகரன்.
ராமானுஜன் பிறந்த கும்பகோணத்தில் தொடங்கி, சென்னை ‘போர்ட் ட்ரஸ்ட்’ தொடர்ந்து லண்டன் ‘கேம்பிரிட்ஜ்’ வரை பயணப்பட்ட அந்த மகா மேதையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு உலக முயற்சியாக செல்லுலாய்டில் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
கணித உலகில் பூஜ்ஜியத்தின் பெருமையைத் தன் ஆறாவது வயதிலேயே கேள்வியாகக் கேட்டு ஆசிரியரைத் திக்குமுக்காடவிட்ட ராமானுஜன், அந்த ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே கோவிலில் வினியோகிக்கும் கொழுக்கட்டை, சுண்டல் எத்தனை பேருக்குக் கிடைக்கும் – கிடைக்காது என்று கணக்கிடுவதில் தொடங்கி, கல்லூரி மாணவர்களுக்கு ‘ட்ரிகனாமெட்ரி’யை டியூஷன் எடுத்தது வரை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கிறார்.
உடற்பயிற்சி ஆசிரியர் ‘தேகாப்பியாசம்’ (உடற்பயிற்சி) செய்ய அழைக்கும்போது, “இல்லை… சார்… நான் எண்களுடனேயே தொடர்ந்து அப்பியாசம் செய்து வருகிறேன்… அதுவே போதும்…” என்று சொல்லி விலகும் அந்தக் குண்டுக் குழந்தை ராமனுஜனைக் கொஞ்சலாம் போல் அத்தனை ஆழமான மென்மை.
வளர்ந்த ராமானுஜனாக ‘அபிநய் வாடி’. அறிமுகக் காட்சியிலேயே தன் தோற்றத்தில் தாத்தா ஜெமினி கணேசனை நினைவு படுத்துகிறார். நடிப்பிலும் பாட்டி சாவித்ரியைத் தொட முயல்வது தெரிகிறது. கணிதத்தில் மூழ்கிவிட்டால் காலம் நேரம் போவது தெரியாமல் அதிலேயே கிடப்பதும், மனைவியின் அருகாமையில் மட்டும் காதலில் திளைப்பதுமாக ஒரு மேதையாகவே வாழ்ந்திருக்கிறார் அபிநய்.
இன்றைக்கு ‘சாயாஜி ஷின்டே’ வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும், ‘மகாகவி பாரதி’யின் சலனப்பதிவுக்கு அவர் உருவம்தான் நம் கண்முன் வந்து நிற்கிறது.
அதைப்போலவே ராமானுஜனின் உருவம் என்றால் இனி காலத்துக்கும் நம் நினைவில் வரப்போவது அபிநய்யின் உருவம் மட்டுமே. அந்த வகையில் ஒரு நடிகனாக, அழியாப்புகழ் தேடிக்கொண்டுவிட்டார் அபிநய். அதற்கு அவர் காலமெல்லாம் ஞானராஜசேகரனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சதா சர்வ காலமும் எண்களுடன் வாழும் நிலையில், உடல் நோயும் சேர்ந்து கொள்ள எப்போதும் ஒரு அலுப்புடனேயே தெரியும் அவரை வழக்கமான கதாநாயகர்களுடன் ஒப்பிடாமல், வாழ்ந்த சரித்திர நாயகனாகப் புரிந்துகொண்டால் அந்தப் பாத்திரத்துடன் ஒன்ற முடியும்.
தனக்கு இருந்த ஒரே ஆறுதலான மனைவியையும் பிரிந்து லண்டனில் தனிமைப்படும் அவரது சோகம் விவரிக்க முடியாதது. இப்போது இருப்பதைப்போல மொபைல் போனில் உலகெங்கும் பேசும் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், கடிதம் ஒன்றே ஒற்றைத் தொடர்புச் சாதனமாக கப்பல் வழியாக மட்டுமே சென்று சேர்ந்து கொண்டிருக்க, அப்படி மனைவிக்கு அவர் எழுதிய மிகச்சில கடிதங்களையும் அவரது அம்மா (சுஹாசினி) மனைவியின் கண்ணில் படாமல் மறைத்துவிடுவது ஆனாலும்… துயரம்..!
ramanujanஅந்த வகையில் ராமானுஜனின் வில்லியான அம்மாவாக சுஹாசினி. மகனின் மேல் அம்மாவுக்கு இருக்கும் பாசத்தை விட, மாமியாராக மருமகள் மேல் இருக்கும் துவேஷமே பெரிதாக இருக்கும் வேடத்தில் சுஹாசினி நன்றாகவே நடித்து, வெறுக்க வைத்திருக்கிறார். சொல்லப்போனால் இதுவரை அவரது நடிப்புப் பயணத்தில் அவர் ஏற்காத வேடம் இது.
ராமானுஜனுக்கு அல்ப ஆயுள் என்பதை சோதிடர் மூலம் அறிந்துகொண்டதால்தான் அப்படி மனைவியை அவரிடமிருந்து விலக்கி வைக்கிறார் என்று ஓரளவுக்கு அவர் பாத்திரத்தை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ராமானுஜனின் வாழ்வில் நடந்ததா இல்லை சுஹாசினிக்காக அந்த வில்லத்தனத்தை அவர் நியாயப்படுத்துகிறாரா என்பது இயக்குநருக்கான கேள்வி.
ராமனுஜனின் வாழ்வில் கணிதத்துக்கு அடுத்து சின்ன மகிழ்வைத் தந்த மனைவியின் பாத்திரத்தில் பாமா. அப்பாவியான அந்த முகம் அப்படியே அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிப்போகிறது.
ராமானுஜனின் தந்தையாக நிழல்கள் ரவி, தேகாப்பியாச ஆசிரியராக தலைவாசல் விஜய், கலெக்டராக சரத்பாபு, அவரது உதவியாளராக மனோபாலா என்று எண்ணற்ற நடிகர்கள் அங்கங்கே வந்து போகும் பாத்திரங்களில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.
“ஒரு ‘ஹார்டி’ மட்டும் இல்லேன்னா நானும் இப்படித்தானே இந்த மண்ணுல திரிஞ்சுக்கிட்டிருப்பேன்..?” என்று மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் தலைவாசல் விஜய்யைக் காட்டி அபிநய் சொல்லும் காட்சி உள்ளத்தை உலுக்குகிறது. அந்த அளவுக்கு ராமானுஜனின் நிஜ வாழ்க்கையில் அவரை அடையாளம் கண்டு, லண்டனுக்கு அழைத்து அவரை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்ற ‘கேம்பிரிட்ஜ்’ பேராசிரியர் ஹார்டிக்கு கும்பகோணத்தில் கோவில் எழுப்பினாலும் குற்றமில்லை. அந்த வேடத்தில் நடித்திருக்கும் நடிகரைக் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது.
இந்தியாவைத் தங்கள் வசப்படுத்த, இந்தியர்களின் கல்வியறிவை முடமாக்கி, அறிவியலில் பல ஆண்டுகள் பின்தங்கச் செய்த ஆங்கிலேயர்களில் ஒருவரான ஹார்டிதான் அகல்விளக்காக இருந்த ராமானுஜனை...