Tuesday, 30 April 2013

கள்ளத் துப்பாக்கி - திரை விமர்சனம் ( Kallathuppakki Movie Review )


kalla-thuppakki-latest-movie
நல்ல 'துப்பாக்கி'யை மிரட்டி மிரட்டியே பிரபலமான படம். அதனாலேயே அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்கிற ஆவலில் பார்த்தே தீர வேண்டிய படமாகிப் போனது.
'சிட்டி ஆஃப் காட்' படத்திலிருந்து பலரும் எடுத்து சிந்தி விட்டுப்போன மிச்சத்தை 'வாரிச் சுருட்டி' வந்திருக்கிறார்கள். அதற்காக சர்வதேசத் தரத்தையெல்லாம் கற்பனை பண்ணி 'சீரியஸ்' ஆகிக் கொள்ள வேண்டாம்.
சென்னையில் போலீஸ் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் கொலை கொலையாக ரவுடிகள் சாய... விருதுநகருக்கு நகர்கிறது கதை.
நாளைய எம்.ஜி.ஆர், நாளைய சிவாஜி, நாளைய ரஜினி, நாளைய கமல், நாளைய அஜித்... ( நாளைய 'விஜய்' இல்லை. அவர்தான் 'நிஜத் துப்பாக்கி'யைக் காட்டி மிரட்டி விட்டாரே..? ) என்று ஐந்து 'ஸ்கூல்' பையன்களை அறிமுகம் செய்கிறார்கள்.
அவர்களில் ஒரு சின்னப்பையன் தவிர மற்ற யாருமே படம் முழுதும் பார்த்தும் கூட நினைவில் வர மறுக்கிறார்கள். ( எதிர்கால எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு வந்த சோதனை...)
பாதிப்படம் வரை அவர்களுக்கும், பள்ளி பி.டி மாஸ்டர் சம்பத்ராமுக்குமான முடக்கடிகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. பையன்களால் அவர் 'சஸ்பென்ஷன்' ஆகி, இடைவேளையில் 'டிஸ்மிஸு'ம் ஆகி 'பையன்களை விட மாட்டேன்' என்று உறும, ஒரு கூட்டம் பையன்களைக் கடத்த... எதிர்பாராத ட்விஸ்டாக பையன்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பி.டி.மாஸ்டரின் மகளும் கடத்தப்படுகிறார்.
அதெல்லாம் சரி... 'கள்ளத் துப்பாக்கி'ன்னா என்னன்னு நீங்க கேட்கிற 'இலக்கண சந்தேகம்' படம் பார்த்த எங்களுக்கு வந்திருக்காதா..? வந்து மட்டும் என்ன..? முன்பாதியில் சம்பந்தம் இல்லாமல் ஒரு சீனில் பையன்கள் ஒரு துப்பாக்கியை வைத்திருப்பார்கள். பி.டி.மாஸ்டரின் கொடும்பாவியைக் கட்டி அதில் சுட்டுப்பழகுவான் ஒரு பையன். தட்ஸ் ஆல்..!
kalla-thuppakki
இரண்டாவது பாதியில்தான் முதல் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்கிறது 'ஸ்டோரி' ரயில். இதற்கு முன்னால் ஒரு சமயம் 'ஸ்கௌட்' பயிற்சிக்காக சென்னைக்கு வரும் பையன்கள் பி.டி.மாஸ்டர் பிடியிலிருந்து தப்பித்துப் போகும்போது ஒரு தாதாவுக்குக் கைமாற வேண்டிய கள்ளத்துப்பாக்கியும், சில லட்சம் பணமும் கிடைக்க, ஜாலியாக வாழ்க்கையை ஜமாய்க்கிறார்கள்.
பிறகு தாதா கையில் சிக்கி, சின்னபின்னமாகி அங்கிருந்து தப்பி ஊருக்கு வந்து பழையபடி பி.டி.மாஸ்டரை மட்டும் கலாய்த்தபடி இருக்கிறார்கள். அந்தத் 'துப்பாக்கியை' அவர்களிடமிருந்து கைப்பற்றதான் சென்னை தாதா இப்போது அவர்களைக் கடத்தியிருக்கிறார்.
'தாதா'விடமிருந்து சின்ன சேதாரங்களுடன் தப்பிய ஹீரோயினை 'தாத்தா' போட்டுத் தள்ளுவதும், பி.டி.மாஸ்டர் மென்டலாவதும் 'குலசாமி ஆத்தா அருளு'டன் செவ்வனே நிறைவேறுகின்றன.
ஒரு கதையை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படிக் கொண்டு செல்ல வேண்டும், எங்கே முடிக்க வேண்டுமென்பதில் இயக்குனர் லோகியாஸுக்கு மிக்க தள்ளாட்டம் இருப்பது புரிகிறது. தாதாவிடம் சிக்கி, சிதிலப்படும் சிறுவர்களிடம் அந்த அனுபவத்தின் பதற்றம் கொஞ்சம் கூட இல்லையே..? அதுநாள் வரை பையன்கள் என்ன ஆனார்களென்று பெற்றவர்களும் தேடவில்லையா..?
ஒளிப்பதிவு சுமார் ரகம். இசையமைப்பாளர் கையில் கிடைத்த வாத்தியங்களையெல்லாம் எடுத்து 'கடுமையாக' இசைத்துப் பழகியிருக்கிறார்.
பிரசிடென்ட் பெண்ணைக் கட்டி, வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்ட பி.டி.மாஸ்டர் சம்பத்ராமின் கேரக்டரும், அவரது நடிப்பும் படத்தில் ஆறுதல். ஹீரோயினை 'நாளைய சிம்ரன்' என்று காட்டாததும் இன்னொரு ஆறுதல்.
கமலுக்கு இருக்கிற ஆயிரத்து சொச்சம் பிரச்சினைகளில், அடுத்து ஒன்றாக இந்தப்படத்தின் டைட்டில் கார்டில் 'கமலின் ஆசியுடன்...' என்று போடுவதும் சேரலாம். 'கமல் வீட்டுக் கட்டுத்தறியும் கலைச்சேவை செய்யும்' என்று நினைப்பவர்கள் இனி எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
கமல் அடுத்து நடத்தும் 'ஸ்கிரீன்ரைட்டிங்' பயிற்சி வகுப்புகளில் படமெடுக்கும் ஆசையுள்ள தன் ரசிகர்களையும் 'மானிய விலையில்' சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்கிறோம்.
பின் குறிப்பு - அந்தக் 'கள்ளத் துப்பாக்கி' யாருடையது என்று கேட்கவில்லையே..? அது 'கடல் மார்க்கமாக' கொண்டுவரப்பட்ட முக்கிய தலைவருடையதாம். அடங்கொய்யால...
-வேணுஜி

No comments:

Post a Comment