Tuesday, 30 April 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... - திரை விமர்சனம்


'தென்மேற்குப் பருவக்காற்று' அதிர்ஷ்டக் காத்தாவும் அமைஞ்சுபோன விஜய் சேதுபதிக்குன்னு பாத்துப் பாத்து கேரக்டர்கள் அமையுதே..?
இதுலயும் அப்படித்தான்... காதல் கைகூடி, இன்னும் ரெண்டுநாள்ல கல்யாணம்கிற வேளையில சும்மா ஃபிரண்ட்ஸோட கிரிக்கெட் விளையாடப் போய் மாட்டிக்கிறார் ஒரு பிரச்சினையில...
அதைப் பிரச்சினைன்னும் சொல்ல முடியாது. பிரண்ட் ஒரு சிக்சர் அடிக்கிறார். பந்தை கேட்ச் பண்ணப் போற விஜய் சேதுபதி, மேலே பந்தைப் பாத்துக்கிட்டே பின்னாலேயே போய் கால் இடறி விழறார். அவரே சுதாரிச்சும் எழுந்துடறார்.
"என்ன ஆச்சு..? நீ பாலை அடிச்சே... நான் கேட்ச் பிடிக்கப் போனேனா... கீழ விழுந்துட்டேனா..? தலையில அடி பட்டிடுச்சு... இந்த இடத்துலதான் 'மெடுலா ஆப்லாங்கேட்டா' இருக்கு. அது ஒண்ணுமில்ல... கொஞ்ச நேரத்துல சரியாகிடும்..!" ன்னு அவர் பேசறது அவங்க ஃபிரண்ட்ஸைப் போலவே நமக்கும் நார்மலாதான் தோணுது.
ஆனா அடுத்த அரைமணி நேரம், ஒரு மணிநேரம்னு அவர் இதே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லும்போதுதான் நிலைமை கட்டுக்கு மீறிப் போனதே தெரியுது, ரிசல்ட், அவருக்கு நிகழ்காலம் உள்பட, கடந்த சில வருஷங்கள்ள கடந்து போன எதுவுமே ஞாபகம் இல்லை - காதல், காதலி உள்பட...
இப்படி ஒரு பிரச்சினைல சிக்கிக்கிட்ட அவரை மீதி இருக்கிற மூணு நண்பர்கள் அந்தப் பிரச்சினை வெளியே தெரியாம காபந்து பண்ணி ரெண்டு நாளும் தங்களோடவே வச்சிருந்து... குடும்பம், அவர் காதலி எல்லாத்துக்கும் 'டேக்கா' கொடுத்து எப்படி அவரை மணமேடை வரை கொண்டு வர்ராங்கன்றதுதான் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கற அட்டகாச ஸ்கிரீன்பிளே..!
nkpk-magicalsongs
இந்த கஷ்டமெல்லாம் அவங்க பிரண்ட்ஸுக்குதான். ஆனா நமக்கு... சுவாரஸ்யமும், சிரிப்பும் குன்றாத என்டர்டெயின்மென்ட் உத்தரவாதம். அதிலும் அந்த திருமண வரவேற்பு சீன் காலத்துக்கும் நினைச்சு சிரிக்க வைக்கிற ரகம்.
ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தும், "யாருக்குடா கல்யாணம்..?" ன்னு கேட்கிற விஜய் சேதுபதியை வச்சுக்கிட்டு பிரண்ட்ஸ் படற அல்லாட்டம் சூபர்ப்.
அப்போதைக்கு அத்தை மகன் சதீஷுக்கு கல்யாணம்னு புளுகி, அந்த சதீஷ் வந்ததும் வேறொன்றைப் புளுகி... பக்கத்துல நிக்கிறது தன் காதலின்னு தெரியாம, "ப்ப்பா... யாருடா இவ... பேய் மாதிரி இருக்கா..? இவளையா சதீஷ் லவ் பண்னினான்..?" ன்னு ஆரம்பிச்சு, விஜய் சேதுபதி சீரியஸாக அடிக்கிற லூட்டி அமர்க்களம்.
அபோதைக்கு அவரைக் கட்டிப்போடற ஒரே மந்திரம், "மச்சி நீ சொன்னா மாடிலேர்ந்து கூட குதிப்பேண்டா..!"ன்னு ஒரே ஒரு நண்பனுக்கு மட்டும் அவர் கட்டுப்படறதுதான். அந்த ஒரு மேட்டரை வச்சுக்கிட்டே கல்யாணம் வரை கொண்டுவந்து... சுபமாகிறது படம்.
சீரியஸாக முகத்தை வச்சுக்கிட்டே காமெடியில சிக்சர் அடிக்கிறார் விஜய் சேதுபதி. "என்ன ஆச்சு..?" ன்னு அவர் ஆரம்பிச்சா தியேட்டரே அல்லோலகல்லோலப்படுது.
அதேபோல், "சிவாஜி செத்துட்டாரா..?" என்று மிரள்றதும், சதீஷுக்குக் கல்யாணம் என்றதும், "நம்ம சதீஷா... சின்னப் பையன்டா அவன்..." ன்னு ஆச்சரியப்படறதும், ரிசப்ஷன்ல வச்சு மணப்பெண்ணைத் திரும்பிப் பார்க்கிறப்பவெல்லாம் "ப்ப்பா... பொண்ணு பேய் மாதிரி இருக்காடா..!" ன்னு அரற்றும்போதும் தியேட்டரில் கைத்தட்டல் காதைப் பிளக்கும்.
'தன்னைப் பார்த்தா அடித்து விரட்டுவான்...'ன்னு பம்மற 'நாகராஜ் அண்ணன்'னு ஒரு கேரக்டரைப் பார்த்து விஜய் சேதுபதி உச்சி மோந்து பாசத்தைப் பொழியறதும், நினைவு சீரானதும் கல்யாண போட்டோவில் அதே நாகராஜ் அண்ணனைப் பார்த்து, "இவனுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையாடா..?" ங்கிறதும் மாஸ்டர் பீஸ் காமெடி.
விஜய் சேதுபதியோட பிரண்ட்ஸா வர்ர ராஜ்குமார், விக்னேஸ்வரன், பகவதி பெருமாளும் புதுமுகங்களா உணர முடியாம கேரக்டர்களாவே மாறிப் போயிருகாங்க. அங்கங்கே பேய்ப்படம் ரேஞ்சுல ஓவரா காட்டற அவங்க எக்ஸ்பிரஷன்களை மட்டும் டைரக்டர் மட்டுப்படுத்தி இருக்கலாம்.
பெரிய கேரக்டர் இல்லாட்டியும் விஜய் சேதுபதியோட காதலியா வர்ர காயத்ரியோட நடிப்பும், கேரக்டரைசேஷனும் ஓகே. வேத் ஷங்கரோட இசையும், சி. பிரேம்குமாரோட ஒளிப்பதிவும், படத்தோட கைப்பிடிச்சு நம்மைக் கூட்டிட்டுப் போகுது. 'இது இவரோட கதை...' ன்னு பிரேம்குமாரைக் காட்டும்போது அவரைப் பார்க்கப் பாவமா இருக்கு..!
இயக்குநர் பாலாஜி தரணீதரன் தமிழ்சினிமாவுக்குப் பெருமைமிக்க வரவு. அவரை அறிமுகம் செய்த புரட்யூசர் வி.எஸ்.ராஜ்குமாரும், படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாரும் பெருமைப் பட்டுக்கலாம்.
தொலைஞ்ச பக்கங்கள் - தொலையாத வெற்றி..!
-வேணுஜி

No comments:

Post a Comment