Tuesday, 30 April 2013

நீர்ப்பறவை - திரை விமர்சனம்


Neerparavai
தமிழ்ப் படங்களில் முதல் முதலா மீனவர் மீதான துப்பாக்கி சூட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க படம். அந்த வகையில இயக்குனர் சீனு ராமசாமியின் முயற்சிக்கு வந்தனங்கள்.
நூற்றுக் கணக்கான மீனவர்கள் இதுவரை இலங்கைக் கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டும் இது ஒரு இந்தியப் பிரச்சினையா கருதப்படாம தமிழ்நாட்டுப் பிரச்சினையாவே கருதப்படறதை நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி ஒரு ஏழை மீனவப் பெண்ணின் பார்வையிலிருந்து சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார் சீனு ராமசாமி.
அது முழுக்க டாக்குமென்டரியா ஆகிடாம இருக்கணும்கிறதுக்காக அதில் ஒரு இனிய காதல் கதையையும் கலந்து சொல்லியிருக்கிறார்.
கடலுக்குப் போன தன் கணவன் திரும்பி வருவான்னு 25 வருஷங்களா கடலைப் பார்த்துக் காத்துக்கிட்டிருக்க நந்திதா தாஸே தன் வீட்டுக் கொல்லைப் புறத்துல அதே கணவனைக் கொன்று புதைச்சதா ஒரு பூகம்பம் கிளம்ப, நந்திதா மீதான போலீஸ் விசாரணைல கதை பிளாஷ்பேக்குல விரியுது.
இதுவரை நாம் பாத்திருக்கிற ஹீரோ விஷ்ணுவுக்கு இதுல முற்றிலும் வேறான வேடம். முதல் பாதிக் கதை வரை ஒரு 'குடி' மகனாவே அவர் வலம் வர, 'நீர்'ப்பறவைன்னா அர்த்தம் இதுதானோன்னு நம்மை ஏகத்துக்குக் குழம்பவே வைக்குது அவர் கேரக்டர்.
அம்மாவோட செல்லத்துனால அவர் அப்படி ஆனார்ன்னு ஒரு கதை சொல்லப்பட்டாலும், அதைத் தாண்டி அவருக்கு வேறு எந்த நல்ல குணங்களும் இருக்கிறதாவும் தெரியலை. போதை மறுவாழ்வு மையத்துக்குப் போய் வந்த பின்னாலதான் அவரோட நல்ல முகம் வெளியே வந்து மனுஷனாகிறார்.
அவரோட காதலுக்கு இலக்காகும் சுனைனாதான் இன்றைய நந்திதாவாம். இருபது வயசுல சுனைனாவாகவும், நாற்பத்தைந்து வயசுல நந்திதா தாஸாகவும் ஒரு பெண்ணின் தோற்றம் எப்படி மாறித் தெரியும்கிறது இயக்குனருக்குதான் வெளிச்சம். சுனைனாவுக்கே வயசான வேடமோ இல்லை நந்திதாவுக்கு இளமையான வேடமோ சாத்தியம்தான்.
இதில் ஆறுதலான விஷயம் சுனைனாவும் சரி, நந்திதா தாஸும் சரி, அற்புதமா நடிச்சிருக்கிறதுதான். நந்திதா பற்றிச் சொல்ல வேண்டிதில்லை. ஆனா 'டல் மேக்கப்'ல வர்ர சுனைனா இயல்பான நடிப்புல பிச்சு உதறியிருக்குன்னுதான் சொல்லணும்.
குடியை விட்டுட்டு சுனைனாவைப் பார்க்க விஷ்ணு வரும்போது, அவரைக் குடிச்சுட்டு வர்ரார்னே நினைச்சு "சாத்தானே, அப்பாலே போ..." ன்னு விரட்டற ஒரு இடம் போதும், சுனைனா நடிப்புக்கு. கையில பைபிளும், பாவாடை சட்டையுமா ஒரு கடல்புறத்து கிறிஸ்தவப் பெண்ணின் அச்சு அசலான தோற்றத்துல சுனைனா வாழ்ந்திருக்குன்னே சொல்லலாம்.
neer-paravai
சீனு ராமசாமிக்கும், சரண்யா பொன்வண்ணனுக்கும் போன ஜென்ம பந்தம் ஏதும் இருந்திருக்கணும். 'தென்மேற்குப் பருவக்காற்று'ல கள்ளிக் காட்டுத் தாயா அவர் படைச்ச அம்மாவுக்கு மாற்றா இதுல கடல்புறத்துத் தாயா சரண்யா. மகன் மேல வச்ச குருட்டுப் பாசத்துல அவன் கெட்டுப் போறதைக் கூட உணராத இப்படிப்பட்ட அம்மாக்கள் தமிழ்நாட்டுல எக்கச் சக்கம்.
சரண்யாவோட கணவரா 'பூ' ராம். எந்தக் கேரக்டருக்குள்ளும் தன்னை அடைச்சுக்கத் தெரிஞ்சவர், இதுலயும் தன்னை சரியா அடைச்சுக்கறார்.
பட ஆரம்பத்துல வயசாளியா அறிமுகம் ஆகற தம்பி ராமையாவுக்கு பிளாஷ்பேக்குல ஏதோ அழுத்தமான வேடம் இருக்கும்னு பார்த்தா வழக்கமான காமெடி குடிகார வாத்தியார் வேடம்தான். "ஒருத்தன் குடியை நிறுத்தறான்னா அவனுக்கு அல்சரோ, காதலோ வந்திருக்குன்னு அர்த்தம்..." னு அவர் வைக்கிற 'பஞ்ச்' சை ரசிக்கலாம்.
படகு உரிமையாளர் அருள்தாஸ், பாதிரியார் அழகம்பெருமாள், யோகி தேவராஜ், 'பிளாக்' பாண்டி, வடிவுக்கரசின்னு நிறைய கேரக்டர்கள் கடல் புறத்துக்கு கலர் சேர்க்கிறாங்க. அதுல படகு கட்டும் தொழில் செய்யும் இஸ்லாமியர் சமுத்திரக்கனியின் கேரக்டர் மட்டும் மனசுல பதியுது.
சமுத்திரக்கனி நான்கைந்து சீன்கள்ள மட்டுமே வந்தாலும் படத்தின் மனசாட்சியாகி மீனவர் பிரச்சினைகளை நியாயத் தராசா எடுத்து வைக்கிறார். சபாஷ் கனி..!
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவில் கடல் மின்னுது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் 'பற பற...' பாடலும், அதற்குண்டான ஆர்க்கெஸ்ட்ரேஷனும் மனசுக்குள்ள குடியேறிடுது. மற்ற பாடல்கள் ஓகே ரகம்.
கணவனிடம் வைத்த காதல்லயும், கணவன் வீட்டார் மீதான பாசத்திலும் குறை வைக்காத நந்திதா தாஸ், அந்தக் கணவனோட ஒரே சொத்தான பிள்ளையை ஏதோ ஊரார் பிள்ளையாவே வளர்த்திருக்கிறதாதான் தோணுது. கல்யாணம் ஆகும்வரை அந்தப் பிள்ளை அம்மாவுடன்தானே இருந்திருப்பார்..? அத்தனை வயசு வரை தெரியாத அப்பா பற்றிய ரகசியம், விருந்தாளி போல் வந்த வேளையில மட்டுமே அவருக்குத் தெரிய வர்ரது திரைக்கதை சறுக்கல்.
நீர்ப்பறவை - கடலும், கவலை சார்ந்த இடமும்..!
-வேணுஜி

No comments:

Post a Comment