Sunday, 3 August 2014

இருக்கு ஆனா இல்ல சினிமா விமர்சனம்

என்ன இருக்கு? என்ன இல்ல..? எல்லாம் ஒன்றேதான். அது ஆவி. அமானுஷ்ய ஆவிக்கும், திட மனுஷனுக்கும் இடையில் ‘ஒரு காதலும் இருக்கு… ஆனா இல்ல…’ என்றும் கொள்ளலாம்.
விபத்து ஒன்றில் தன் கண்முன்னாலேயே இறக்கும் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும் கதாநாயகன் அந்தப் பெண்ணை வீட்டிலும் பார்க்கிறான் – ஆவியாக. அல்லோலகல்லோலப்பட்டு அந்த இரவைக் கழித்தால், மீண்டும் மீண்டும் அதே ஆவி, இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வருகிறது.
ஒருகட்டத்தில் பயமுறுத்துவதை நிறுத்திவிட்டு அந்த ஆவி, ஹீரோவிடம் தான் வந்த விஷயத்தை ஓப்பன் செய்கிறது. அதன்படி, ‘தான் யார்..?’ என்று கண்டுபிடித்துத் தரச் சொல்கிறது. அதுவரை ஒழுங்கற்றுக் கிடந்த ஹீரோவின் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது. இதனால் ஹீரோவுக்கும் ஆவி மீது ஒரு காதல் அரும்புகிறது. ஆவியால் ஸ்மார்ட்டாக மாறிவிட்ட ஹீரோவை அலுவலகத்தில் இன்னொரு பெண்ணும் ‘லவ்’வ ஆரம்பிக்கிறாள்.
அந்தக் காதல்கள் என்ன ஆகிறது என்பதைத் தாண்டி மனித உறுப்புகளைத் திருடி விற்கும் அபாய மருத்துவமனைகள் பற்றியும் ‘அலர்ட்’ செய்கிறார் இயக்குநர் கே.எம்.சரவணன்.
Irukku aana Illa‘விவந்த்’ ஹீரோவாக, ‘ஈடன்’ ஹீரோயினாகிறார். வழக்கமாக ஆவி என்றால் ‘அகோர’ மேக்கப்தான் போட வேண்டும் என்ற லாஜிக்கை மாற்றி ஆவியை அட்டகாச மேக்கப்பில் இயக்குநர் காட்டியிருப்பதால் ‘ஈடன் தோட்டத்து ஆப்பிள்’ போலவே இருக்கிறார் ஆவியாக வரும் ஈடனும்.
அதனால், ஆவியை யாராவது காதலிப்பார்களா என்று யாரும் கேள்வி கேட்க முடியாமலும் செய்திருக்கிறார். நமக்கே ஒரு கட்டத்தில் ஈடனைக் காதலிக்கத் தோன்றுகிறது. (என்ன ஒன்று … ஒரே காஸ்ட்யூமில் வருவதில் மட்டும் சின்ன அலுப்பு…)
இயக்குநர் எந்தக் கடிவாளமும் போடாததால் விவந்த் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஆவி மாற்றத்தால் ஸ்மார்ட் ஆக ஆனதும் அவரைப் பார்க்கலாம் போலிருக்கிறது. அவரது நண்பனாக வரும் ஆதவன் நகைச்சுவைக்காம். அவர் வராமல் இருந்தாலே படத்தை ரசிக்க முடிகிறது.
படமெல்லாம் நிரம்பி இருப்பது ‘ஆவி’ ஈடன்தான். மறைந்த ஸ்ரீவித்யாவின் ஆவியோ என்று நினைக்க வைக்கும் கண்கள் ஈடனுக்கு. ஒரு சாயலில் ஸ்ரீவித்யாவின் இளவயதை ஒத்திருக்கிறார். இன்னும் மெலிந்தால் த்ரிஷா சாயலுக்கு வரலாம் ஈடன். மருத்துவமனையில் கோமாவிலிருக்கும் அவரது சகோதரியாக ஈடனுக்கு இன்னொரு வேடமும் இருக்கிறது படத்தில். அது ஏன் என்பது ‘கிளைமாக்ஸ்’ சுவாரஸ்யம்.


மருத்துவராக வரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மேக்கப் போட்டவருக்கு தண்டனையாக ஒருவாரம் அந்த ஒய்.ஜி.மகேந்திரன் கெட்டப் போட்டோவுடன் மட்டும் தனியறையில் அடைத்து வைக்கலாம். அவ்வளவு கொடுமை..! உறுப்புகளைத் திருடும் மருத்துவமனையின் டாக்டர் ஒருவர், தங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒய்.ஜி.எம்மை “ஃப்ரெஷ் பீஸ்…” என்று அழைப்பது அதைவிடக் கொடுமை..! (உன் கிட்னியைக் காக்காய் தூக்கிட்டுப் போக…)

No comments:

Post a Comment